St Our Ceylon News: முஷார்ரபுக்கான விளம்பரத்தின் நோக்கம் என்ன ?
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

முஷார்ரபுக்கான விளம்பரத்தின் நோக்கம் என்ன ?

சேறுபூசுகின்றவர் குற்றவாளியா ? அதற்கெதிராக முறையிடுகின்றவர் குற்றவாளியா ? 

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சி தொகுப்பாளர் முஷாரப் அவர்களுக்கு எதிராக மு.கா தலைவர் முறைப்பாடு செய்தார் என்றும், அதனால் முசாரப்பை முகாமைத்துவம் இடைநிறுத்தம் செய்ததாகவும் மு.கா தலைவருக்கெதிரான புதியதொரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மு.கா தலைவர் அவ்வாறு செய்தார் என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க, அவ்வாறு செய்திருந்தாலும்,
முறைப்பாடு செய்கின்றவர் குற்றவாளியா ? அல்லது மக்கள் மத்தியில் வதந்திகளை உருவாக்கும் விதத்தில் ஊடகவியலாளர் முத்திரையுடன் அரசியல் காய் நகர்த்துகின்றவர் குற்றவாளியா ? என்ற கேள்வி எழுகின்றது.   

முகநூலில் பதிவிட்டது பாரதூரமான வதந்தி என்று தெரிந்ததனால் விஜயதாச ராஜபக்சவின் மகன் ஒருசில நேரத்தில் தனது பதிவினை நீக்கினார். ஆனால் அந்த விவகாரத்தினை பூதாகரமாக்கி அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் மு.கா மீது சேறுபூச முற்படுவதுதான் ஒரு பொறுப்புள்ள ஊடகவியலாளரின் ஊடக தர்மமா ?    

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றபோது அவருக்கெதிரான விசாரணை முடியும்வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வது வழமையாகும். அது அந்நிறுவனத்தின் உள்ளக விவகாரமாகும். அதனை முறைப்பாட்டாளரும் நிருவாகமும் பார்த்துக்கொள்ளும். இதில் ஊடகவியலாளர்கள் மட்டும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
அப்படியிருந்தும் முஷாரப் அவர்கள் தான் வகிக்கும் தொழிலிலிருந்து ஒருபோதும் இடைநிறுத்தம் செயப்படவில்லை. குறித்த ஒரு நிகழ்ச்சியிலிருந்தே இடைநிறுத்தப்பட்டார். 
இந்த உள்ளக விவகாரமானது வேண்டுமென்று மு.கா தலைவர்மேல் பழியைப்போட்டு, அவரை சிறுமைப்படுத்துவதற்கான பிரச்சாரம் என்றே நோக்கப்படுகின்றது.    

அரசியலில் இரகசியம் கிடையாது. எவ்வாறான ரகசியங்களும், தில்லுமுள்ளு வேலைகளும் வெளியே கசிந்துவிடும். இது அனுபவமற்றவர்களுக்கு புரியாது. அத்துடன் அரசியலில் அந்தரங்கமாக நடைபெறுகின்ற மாபியா வேலைகளை அப்பாவி பாமர மக்களால் புரிந்துகொள்ளவும் முடியாது.   
வெளிப்பார்வையில் முஷாரப் அவர்கள் ஓர் நடுநிலையான சிறந்த ஊடகவியலாளராக தென்பட்டாலும், அவர் ஓர் அரசியல் கட்சி சார்ந்தவர் என்றும், அவர் முஸ்லிம் காங்கிரசை ஓரம் கட்டுவதற்காக மதிநுற்பமான முறையில் செயல்பட்டு வருகின்றார் என்றும் அரசியல் மட்டத்தில் காதும் காதும் வைத்தாற்போல் பேசப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த தேர்தலுக்கு முன்பாக ஹசனலி சேர் தலைமையிலான குளுவினர்களையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களையும் கூட்டமைப்பு என்ற போர்வையில் மு.காங்கிரசுக்கு எதிராக ஒன்று சேர்த்துவைப்பதில் ஊடகவியலாளர் முஷாரபின் பங்கு மகத்தானது என்றும், 
பொத்துவில் பிரதேசசபையை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யவிடாது தடுப்பதற்காக திரைமறைவில் கடுமையாக பணியாற்றி அதில் தோல்வியடைந்தார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. 

மக்கள் முன்பாக நாங்கள் எவ்வளவுதான் நல்லவர்கள்போன்றும், நடுநிலையானவர்கள் போன்றும் நடித்தாலும், தொடர்ந்து அவ்வாறு நடிக்கமுடியாது. அத்துடன் முஷாரப் அவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரச்சாரமானது மு.கா மீது சேறுபூசுவது மட்டுமல்லாது, தனது எதிர்கால கள அரசியலுக்காக மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் நடவடிக்கையுமாகும்.   

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக